Monday, June 29, 2009

3 + 32 = அட்டகாசங்கள்....


இந்த தொடரை தொடங்கி வச்சவுங்க யாருன்னு தெரியல அவுங்களும் என்னோட பதிவுகளுக்கு வருவாங்கன்னு தெரியல (ம்க்கும் நீயே உன்னோட ப்ளாக்கை மாசத்துக்கு ஒரு முறை தான் பார்க்குறா இதுல அவுங்க வேற பார்க்கணுமாக்கும்) அவங்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.....சும்மா சொல்லக்கூடாது இந்த 32 கேள்வி பதில் பதிவு போடாத ஆளுங்க தான் பதிவுலகத்தில் ரொம்ப கம்மியாக இருக்காங்க. மீதி அம்புட்டு பேரும் போட்டாச்சு - பிடிக்குதோ இல்லையோ, கேள்வியில குத்தம் குறை இருந்தாலும் அதையும் சொல்லிக்கிட்டே பதிலும் பதிவும் போட வச்சாங்கல்ல/ அதுக்கு தான் அவர்களுக்கு வாழ்த்து :)

கேள்விக்கு போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன சீன் போட்டுக்கிறேன் :)

நான் பிறர் தேவையில்லாமல் கேள்வி கேட்கக்கூடாத அளவுக்கு நடக்க வேணுமுன்னு முயற்சி பண்றவன். அப்படிப்பட்ட எனக்கு 3 பேரு ரவுண்டுகட்டி 32 கேள்வி கேட்டுருக்காங்க. யாரு அந்த மூணு பேரு சகோதரி மயில், சகோதரி கவிதா, சகோதரன் தென்றல். இன்னும் சொல்லப்போனா இவுங்க பதிவுகளில் நான் அதிகமாக கேள்வி எல்லாம் கூட கேட்டதில்ல/ அந்த அளவுக்கு பச்சப்புள்ளைய போயி இப்படி கேட்டுப்புட்டாங்க....என்னதான் சூனா பானா வேஷம் போட்டாலும் மனசுக்குள்ள ஒரு ஆசை இருக்கத்தான் செய்யுது. அப்படியே சேர் மேல உக்கார்ந்து கால் மேல காலை போட்டுக்கிட்டு பேட்டி கொடுக்கற நினைப்புல இருக்கேன் இப்போ....வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம்.

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? (இந்த கேள்வியை அப்படியே எழுதிவைக்குற பழக்கம் இன்னும் போகலைங்க) எங்க தாத்தா வாயில வந்தது அதனால எனக்கு வந்ததுன்னு ஆத்தா சொல்லி கேள்விப்பட்டுயிருக்கேன். ரொம்ப பிடிக்கும். ஆனால் சில சூழ்நிலையில் ஏண்டா இந்தப் பெயரை வச்சாங்கன்னும் நொந்து போயிருக்கேன். அப்புறம் பாட்ஷா படத்துல வர ரஜினி மாதிரி எனக்கு இன்னொரு பெயரும் இருக்கு. அது ஜாதக பெயராம்! அதை கூப்பிட மாட்டாங்க. அப்புறம் அம்மா என்னை அழைப்பது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவரை தவிர வேற யாராச்சும் அப்படி அழைத்தால் பிடிக்காது அது அம்மா ஸ்பெசல் :)

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

உண்மையை சொல்லனுமுன்னா தெரியல....படம் பார்க்கும் போது, புத்தகம் படிக்கும் போது மனசுக்கு பிடிச்சவுங்க டக்குன்னு ஏதாச்சும்
கஷ்டபடுற மாதிரி சொல்லிட்ட உடனே கண்ணு கலங்கிடும். ஆனா அப்படியே அடக்கிடுவேன்.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும்....பெருசாக எல்லாம் இருக்காது. என்னோட கையெழுத்து சின்னதாகத்தான் எழுதுவேன். அழகாவும் இருக்குன்னு பலபேர்சொல்லியிருக்காங்க. ஆனா இப்ப எல்லாம் கோழி கிறுக்கல் தான். அதிகம் எழுத முடியுறதுல்ல

4. பிடித்த மதிய உணவு என்ன?


அந்த அளவுக்கு அதிகம் சாப்பாட்டு மேல எல்லாம் ஈடுபாடு இல்ல.....அம்மா வைக்கும் முள்ளங்கி சாம்பாரும்+முட்டையை வேகவச்சிசெய்யும் தொக்கும் ரொம்பப் பிடிக்கும்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இந்த கேள்வி இப்படி இல்லைன்னு சில பதிவுகளில் படிச்சிருக்கேன். உடனே நட்பு வச்சுக்குவீங்களான்னு கேட்டா இல்லை என்பது தான் என்னோட பதில்.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா....அருவியில் குளிக்கப் பிடிக்குமா?


கடல்ல நிறைய முறை குளிச்சிருக்கேன். அருவியில இன்னும் குளிக்கல. அதனால அருவி தான் இப்போதைக்கு ;)

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அந்த அளவுக்கு கவனிச்சிப் பேசுவேனான்னு எனக்கே தெரியல. இருந்தாலும் முகத்தைத்தான் முதலில் பார்ப்பேன்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?


என்கிட்ட இருக்குற எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். பிடிச்சது அதிகம் சதவீதம் இருக்குறதுனால, பிடிக்காதது பார்டர் மார்க் கூட இல்ல அதனால பிடிக்காத விஷயம் எதுவும் இல்ல.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இப்போதைக்கு நான் முழுசாத்தான் இருக்கேன்.

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என்னோட அம்மா.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?


நீலம்

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?


பார்த்துக் கொண்டு இருப்பாது ஆணிகளை.....கேட்டுக் கொண்டுயிருப்பது "ஏன்டா பாண்டி இன்னாத்த நீ பண்ண..." வால்மீகி - இளையராஜா

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு

14. பிடித்த மணம்?


புது புத்தகத்தி்ல் இருந்து வரும் மணம் ரொம்ப பிடிக்கும்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

பிடித்த விஷயங்கள்ன்னு ஒண்ணை மட்டும் சொல்லமுடியாதுங்க இவுங்க 5 பேருக்கிட்டையும்

சகோதரி முத்துலட்சுமி

சகோதரி மை ஃபிரண்ட்

சந்தோஷ் அண்ணே

தல கானா பிரபா

தல அய்யனார் (ஏற்கனவே போட்டுட்டாரு)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

சகோதரி மயில் - அவர் எழுதிய குழந்தைகள் கவிதை தான் நான் என் நினைவில் இருக்கும் முதல் பதிவு - அப்புறம் துறை சார்ந்த சில பதிவுகள் எழுதியிருக்கிறார் அதை தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என்னோட பணிவான வேண்டுகோள்.

சகோதரி கவிதா - "கேப்பங்கஞ்சி வித் கவிதா" பதிவுகள் அனைத்தும் பிடிக்கும். ஆனால் இப்ப எல்லாம் அதை காணோம். இவரின் தொடர்கதைகளும் அருமையாக இருக்கும். இவர் பொதுவாக மனதுக்கு அப்படியே பதிவாக போடுவதற்க்கு பதில் கதையாகவோ புனைவாகவோ எழுதினால் இன்நேரம் தமிழ்மணம் இவரையும் ஒரு பின்நவீனத்துவவாதின்னு சொல்லியிருக்கும்.

சகோதரன் தென்றல் - அதான் சகோதரன்னு சொல்லிட்டோம்ல்ல எப்படி இருப்பாரு. என்னோட அண்ணன் என்னை போலதான்.....எப்பவச்சும் ஒரு பதிவு அதுவும் டிக்கெட்டு பின்னாடி எழுதிற மாதிரி குட்டியாக இருக்கும். ஆனா சரக்கு அதிகம் உள்ள மனுஷன். திரைப்படங்ளை பற்றி இவர் எழுதவேண்டும் என்பது என்னோட ஆசை

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம்

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

அப்படி வரைமுறை எல்லாம் இல்ல

20. கடைசியாகப் பார்த்த படம்?

புதுபடம் என்றால் பசங்க

பழைபடம் என்றால் - மலையாளத்தில் அச்சுவிண்ட அம்மா & விருமாண்டி

21. பிடித்த பருவ காலம் எது?


குளிர்காலம்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஜெயமோகனின் திசைகளின் நடுவே....சிறுகதை தொகுப்பு

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?


படங்கள் வச்சுக்கிறது இல்ல

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது ;
எல்லா சத்தமும் பிடிக்கும் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒண்ணும் இல்ல

பிடிக்காதது :
அதே பிடித்த சத்தங்கள் அதிகமாகும் போது பிடிக்காது

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?


துபாய்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?


இருக்கு.


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஏமாற்றுவதை

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?


கடவுள் எதுன்னு தெரிஞ்சாதானே சாத்தான் எதுன்னு தெரியுறதுக்கு! நொடிக்கு நொடி குழப்புங்களும் கேள்விகளும் சூழ்ந்த நிலையில் இருக்கும் நான் தான் எனக்கு சாத்தான்.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?


குறிப்பிட்டு எதுவும் இல்லை...லீவு கிடைச்ச இழத்து போத்திக்கிட்டு தூங்குறவன் நான்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே...

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?


தெரியாது

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

பயணம்

இந்த மாதக்கணக்கு முடிஞ்சிடுச்சி இனி அடுத்த மாதம் சந்திப்போமா!!

Monday, June 01, 2009

இசைக்குப் பிறந்த நாள்

ஒரு புதிய படத்தின் நாயகன் முதல்முதலில் தன் நாயகியை பார்க்கிறான். பார்த்தவுடனே அவனுக்கு காதல் மலர்கிறது. பின்னணியில் ஒரு வயலின் இசை தொடங்குகிறது, உள்ளத்தைத் துள்ளி எழச்செய்யும் இசை அது. ஓ.. வென கத்திக் கூச்சலிட்டு ஆடவேண்டிய இசை. ஆனால் உள்ளுக்குள்ளேயே, நாயகன் ஆடவில்லை பாடவில்லை அப்படியே நாயகியை வைத்தக்கண் வாங்காமல் பார்க்கிறான். ஆனால் அங்கே அவன் உள்ளத்தில் இருக்கும் காதல் ஆடியிருக்கும் பாடியிருக்கும் என்பதை அந்த பின்னனி இசையில் நமக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டிருக்கிறார்.

இந்த வயலின் இசை பல வருடங்களுக்கு முன்னாலேயே வந்துவிட்டது. திரு. மணிரத்தினத்தின் முதல் படமான "பல்லவி அனுபல்லவி" என்கிற படத்தில் வந்த இசை இன்றைக்கு வெளிவந்திருக்கும் "சர்வம்" படத்திறக்கும் மிக பொருந்தமாக அமைந்திருக்கிறது. இது அவருக்கு புதிது அல்ல. அவரை ரசிக்கும் நமக்கும் புதிதல்ல.

தன்னுடைய இசையால் மனிதனின் உள்ளத்தை ஆட்டிப்படைப்பவர். தன்னோட அன்பு கொண்ட இசையால் உலகத்தின் உள்ள இசை நெஞ்சங்களை கவர்ந்தவர்

"திரு. இசைஞானி இளையராஜா அவர்களின் 66வது பிறந்த நாள் இன்று.











இசைஞானியின் பிறந்த நாளான இன்று அவர் இசைஅமைத்த மூன்று பாடல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். இந்த மூன்று பாடல்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. நம்ம இசைஞானி இந்த மூன்று பாடல்களிலும் தோன்றியிருப்பார்.

குட்(டி) நியூஸ் ;- இப்போ வரவிருக்கும் அழகர்மலை படத்தில் ஒரு முழுபாடலுக்கு இசைஞானி நடித்திருக்கிறார்.

மடைதிறந்து பாடும் நாதியலை நான்









இன்றும் இந்த பாடலை ரீமிக்ஸ் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அழகாக ஹார்மோனிய இசையுடன் தொடங்கி பின்பு வயலின்கள் ஒலிக்க துள்ளவைக்கும் பாடல். திரு. எஸ்.பி.பி அவர்களின் குரலுக்கு இசைஞானி வாய் அசைத்திருப்பார். இந்த பாடலில் இசைஞானி தோன்றும் போது பாடல்கள் வரிகள் இப்படி வரும் "புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே"அந்த வரிகள் அவருக்கு என்றும் பொருந்தத்தக்கது. ஆமாம் இசை தெய்வம்ய்யா நீ ;). இப்போது அவரிடம் இந்த வரிகளை பற்றி கேட்டால் என்ன சொல்லுவார்!!?

நான் தேடும் செவ்வந்திப்பூ இது...









"சந்தோஷம் உச்சமாக போகும் போது ஒரு பீலிங் இருக்கும் அப்படியே செத்துட்டா நல்லாயிருக்கும் போல இருக்குமேன்னு, அது வந்து இந்த பாட்டுக்கு முன்னாடி ராஜா சார் ஒரு ஆலாபனை பாடுவாரு உண்மையிலே சொல்றேன் அப்படியே உயிரோட செத்துடலாம் போல இருக்கும் அப்படி ஒரு ஜீவன் அதுல இருக்கும்" சில வருடங்களுக்கு முன்னால் சென்னையில் இசைஞானி கச்சேரி செய்தபோது இந்த பாடலை அறிமுகப்படுத்த திரு. பார்த்திபன் சொன்னவை. உண்மையில் அந்த ஆலாபனையின் மூலமாக நம்ம மனசுக்குள் நுழைந்து பாடலில் நிறைஞ்சியிருப்பாரு ராஜா.

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே...!









இந்தப் பாடல் தொடங்குவதற்க்கு முன்னால் நடிகர் ரகுமான் இசைஞானியிடம் அந்த பல்லவியை ஒருமுறை பாடுங்கள் ராஜா என்பர் இசைஞானியும் கல்யாண மாலை....என்று பாடி முடிப்பார். அதை ஆழ்ந்து ரசித்துவிட்டு நடிகர் ரகுமான் ُ’பியுட்டிஃபுல் ராஜா’ என்பர். அந்த ’பியுட்டிஃபுல்’ என்ற வார்த்தை ராஜா இசைமைத்த அந்த இசைக்கு எந்த அளவுக்கு பொருந்தும் என்பதை இப்போதும் ஏதாவது ஒரு திருமணத்தின் இசைக்கச்சேரியில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதே சாட்சி. பேசும் போது அவரோட குரல் இல்லமால் இருப்பது கொஞ்சம் வருத்தம்.












ஸ்பெஷல்

How to name it இசைத்தொகுப்பில் எனக்கு ரொம்பப் (இதுக்கு அப்புறம் எத்தனை ரொம்ப போட முடியுமே அத்தனையும் போட்டுக்கோங்க) பிடித்த Do anything இப்போது உங்களுக்காக.



தூக்கத்தில் இருந்து விழித்த குழந்தையை அன்பு கொண்டு ஆர அரவணைக்கும் அன்னையே போல என்றென்றும் இருக்கும் உன் இசை. மீண்டும் இசை தெய்வத்தை வாழ்த்த எதுவுமே இல்லை அதனால வணங்குகிறேன்.