பண்ணைபுரத்து இசை, வெள்ளிக்கிழமை மாலையில் இசை கச்சேரி நடத்த ஷார்ஜா வந்திருந்தது., 87 இசை கலைஞர்கள், SPB, சித்ரா, மனோ, ஸ்ரேயா கோஷல், சாதனாசர்கம், மஞ்சரி, மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், திப்பு, பவதாரணின்னு அருமையான பின்னனி பாடகர்களுடன் அழகான பாடல்களை கூடவே கொண்டு வந்திருந்தது.
இந்த இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க குஷ்பு, ஜெயராமும் வந்திருந்தார்கள் (கொஞ்சம் ஓவராகவே தொகுத்து அருத்துட்டாங்க)
ஜனனி ஜனனி என்று தன் வழக்கமான பாடலுடன் இசை நிகழ்ச்சியை தொடங்கினார் இசைஞானி. "எனக்கு நீங்க தரும் பரிசு அமைதியாக இருந்து இந்த நிகழ்ச்சியை ரசிக்க போறிங்க அது தான் நீங்கள் எனக்கு தரும் பரிசுன்னு" எடுத்தவுடனே அன்பு கட்டளை போட்டுட்டார். சொர்கமே என்றாலும் என்ற பாடலில் உள்ள வரிகளை மாற்றி அதற்க்கு பதிலாக கோகினூறு வைரம், அம்மா கையால சாப்பாடு, சாப்டுவேர் இன்ஜீனியர்கள், கோவில் மணி யோசை, பூக்கள்ன்னு இந்தியாவின் பெருமைகளை எல்லாம் சேர்த்து பாடி அந்த அரங்கத்தையே உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். இந்த பாடலை பாடி முடிச்சிட்டு உங்களுக்கு கொடுக்குறதுக்கு ஏன்க்கிட்ட என்ன இருக்கு இந்த பாட்டை தவிரன்னு ஒரு போடு போட்டாரு பாருங்க கைத்தட்டலில் அரங்கமே குலுங்குச்சி.
சீனியர்ஸ் ஜீனியஸ் தான்னு பாலு சாரும், சித்ரா, மனோ அவர்களும் எந்த சேதாரமும் இல்லாமல் அருமையாக பாடினார்கள். ராஜபார்வை படத்துக்கு முதல் டியூன் அந்தி மழை பொழிகிறதுன்னு போட்டாராம் ராஜா. ஆனால் அதில் திருப்தி இல்லாமல் கமலும், இயக்குனரும் இன்னும் வேற மாதிரி டியூன் வேண்டும் என்று சொல்ல மொத்தம் 30 டியூன் போட்டாராம். கடைசியில எல்லா டியூனையும் கேட்டுட்டு முதலில் போட்ட டியூனே ஓகேன்னு சொல்ல அது தான் அந்தி மழை பொழிகிறது என்ற பாடலாக வந்தது என்று பாலு சொன்னார். ஆனால் அந்த 30 டியூனில் ராஜாவுக்கு பிடித்த டியூன் வேறான்று அந்த டியூன் வேறொரு படத்தில் உபயோகப்படுத்தி அதற்க்கு பாலு சாருக்கும் தேசிய விருது வாங்கி கொடுத்தது.
சில பாடல்கள் டியூன் போடும் போது அதில் மற்றொரு பாடலின் ஈர்ப்பு இருக்கும் அந்த மாதிரி திரு. பர்மன் அவர்கள் இசை அமைத்த பாடலின் ஈர்ப்பினால் வந்த பாடல் தான் இஞ்சி இடுப்பழகி என்ற பாடல் அந்த இந்தி பாடலையும் இஞ்சி இடுப்பழகி பாடலையும் பாலு அவர்கள் அழகாக பாடி காண்பித்தார். மவுனராகம் படத்தில் வரும் மன்றம் வந்த தென்றலுக்கு என்ற பாடல் இந்தியில் ஸ்ரேயா கோஷலும் தமிழில் பாலு அவர்களும் பாடினார்கள். இந்த பாடல் பாடும் போது இடையில் ஒலியில் பிரச்சனை வர டக் என்று நிறுத்தி விட்டு அந்த பிரச்சனையை சரி செய்த பிறகே அந்த பாடல் மொத்தமாக பாடினார்கள். இது போல் மற்றொரு பாடலிலும் இசை குழுவினர் சரியாக இசை அமைக்காத தால் அந்த இடத்திலேயே அதை சரி செய்து மீண்டும் பாடினார்கள்.
திடிரென்னு மேடையில் தோன்றிய கார்த்திக் ராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் ராஜாவை கலாய்சி (கொஞ்சம் ஒவராகவே) எடுத்துட்டாங்க. யுவன் "என் பாட்டை பாடுங்கன்னு" சொல்ல ராஜாவும் உடனே அறியாத வயசு புரியாத மனசுன்னு பாடி முடிக்க. "இது இல்ல என் பாட்டுன்னு சொல்ல..நம்ம பாட்டு பாடுங்கன்னு சொல்ல டேய் இப்ப எதுக்கு இங்க வந்து நீ கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு" ராஜா கிண்டலுக்கு சொல்ல "இல்ல நீங்க பாடினால் தான் நாங்க போவோம்ன்னு" யுவனும், கார்த்திக்கும் அடம் பிடிக்க அப்படி என்ன பாட்டுய்யா பாட சொல்றான்னு நமக்கும் ஆர்வத்தை கிண்டி விட கடைசியாக மூன்று ராஜாக்களும் சேர்ந்து ராஜா ராஜாதி ராஜனிந்த இந்த ராஜான்னு பாட ரசிகர்களின் மனதில் மூன்று ராஜாக்களும் ராஜியம் செய்தார்கள். அதில் வரிகள் மாற்றி இந்த காலத்துக்கு பாப், ராக், ஜாஸ் தான் பிடிக்கும்ன்னு யுவன் சொல்ல வேண்டா சாமி அதெல்லாம் எனக்கு வராதுன்னு ராஜா ஒரே கும்புடு போட மொத்தத்தில் மூன்று ராஜாக்களும் கலக்கிட்டாங்க.
வந்திருந்த சேட்டன்களுக்கும், சேச்சிகளுக்கும் ரெண்டு மலையாள பாடல்கள் பாடினார்கள்.
பாலு சாரிடம் குஷ்பு ஒரு பாடல் கேட்க நான் அந்த பாட்டு பாடினால் "நீ ஆடவேண்டும் என்று சொல்ல அய்யோ இங்கையா ராஜா சார் அடி பின்னிடுவாருன்னு சொல்ல உடனே பாலு சார் ராஜாவை பார்த்து நீ பார்த்துட்டும் பார்க்காத மாதிரி இருந்திடுன்னு சொல்ல". அந்த பாடல் பாடிக்கொண்டுயிருக்கும் போது குஷ்பு, மனோ, ஜெயாராம் மூன்று பேரும் குத்து குத்துன்னு குத்த. ராஜா பார்க்கும் போது நல்லபிள்ளைகளை போல நடிக்க மொத்தமாக அரங்கத்தையே ஆட வைத்தார்கள். அந்த பாடல் அடியே அத்தா அத்தோரமா வாரியா.
வழக்கமாக பாலு சார் ராஜாவை புகழ்ந்து சொல்லிட்டு போக வழக்கமாக ராஜா சார் அதெல்லாம் இல்லன்னு சொல்ல "இல்ல அதெல்லாம் உண்மை தான்னு மேடைக்கு பின்னாடி இருந்து பாலு சார் குரல் கொடுக்க". நீ இங்க வா முதல்லன்னு தன் அருகில் நிற்க வைத்து 24 மணிநேரமும் இசையாகவே வாழ்ந்த உலகத்தில் இசை மேதைகளில் பெயர்களை எல்லாம் சொல்லி இவர்களின் முன்னால் நான் எல்லாம் தூசுன்னு ராஜா சொல்ல. "அந்த மேதைகளின் வரிசையில் இந்த தூசுக்கு தான் உட்காரும் தகுதியிருக்கிறதுன்னு ஒரே போடக போட்டார் பாலு சார்."
ஜெயராம் அவர்கள் கமல், ரஜினி, ஜோசுதாஸ் போல மிமிக்கிரி செய்து காண்பித்து மக்களை கலகலப்பாக்கி கொண்டுயிருந்தார்.
மனோவும், சித்ரா அவர்களும் மதுரை மரிக்கொழுந்து வாசம்ன்னு பாடல் பாட அந்த காட்சிகளை நினைவுக்கு கொண்டு வர வைத்தனர். ஓ பிரியா பிரியா என்ற பாடலை கேட்கும் போது இன்றைய இசை அமைப்பாளர்கள் மனோவின் குரலை தவரவிட்டுவிட்டார்கள் என்ற ஒரு ஏக்கம் வர வழைத்தது.
எந்த கேள்விக்கும் சரி எந்த மேடையிலும் சரி புன்னகையை பதிலாக அளித்து பல நெஞ்சகளை கொள்ளை அடித்த சின்னகுயில் சித்ரா அவர்கள் இந்த மேடையிலும் ரசிகர்ளின் நெஞ்சத்தை கொள்ளை அடித்தார்.
சங்கீத ஜாதி முல்லை பாடல் பாடும் போது எப்படிப்பா இந்த ஆளு இவ்வளவு வருஷம் கழிச்சும் அதே மாதிரி, ஏற்ற இறக்கத்துடன் பாடுறாருன்னு அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்தார் பாலு சார்.
பவதாரணி, ஸ்ரேயா கோஷல், திப்பு, மஞ்சரி இவர்கள் எல்லாம் இன்னும் பயிற்சி தேவை என்று சொல்ல வைத்தார்கள். நடுவில் நடுவில் இசையோடு பாடாமல் பாடல் வரிகளை மறந்து மறந்து முழித்தார்கள். அதிலும் திப்பு செய்த தப்பை ராஜா மீண்டும் திருத்தி எந்த இடத்தில் தவறு நடந்ததோ அதே இடத்தில் இருந்து மீண்டும் அவரை பாட வைத்தார்.
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்த தேனோ என்ற பாடலை பாடும் போது தந்தைக்கு மகன் தப்பாம பிறந்திருக்கான்யான்னு சொல்ல வைத்தார் விஜய் ஜேசுதாஸ்.
ராசாத்தி உன்னை காணதா நெஞ்சுன்னு பாடலை ஜெயசந்திரன் இல்லாத குறையை மது பாலகிருஷ்ணன் அழகாக நிறைவேற்றினார்.
அம்மாக்கள் பாட நிறைய தாலாட்டு போட்டு வச்சுட்டாரு ராஜா, அப்பாக்கள் பாட ஒரு சில தாலாட்டு தான் போட்டுயிருக்காரு அதுல ஒன்னு தான் தெண்பாண்டி சீமையிலே அந்த பாடலை ராஜா எந்த வித வாத்திய ஒலியும் இல்லமால் மிக அற்புதமாக பாடினார். அவரே விரும்பி பாடினாரா இல்ல குளிரில் நடுங்கும் தன் ரசிகர்களை தாலாட்ட நினைத்து பாடினாரோ என்பது அந்த கடவுளுக்கு தான் தெரியும்.
இசைக்குழவினர் அனைவரும் மிக அற்புதமாக வாசித்தார்கள். ஒரு சில இடங்களில் தவறு நடந்தது இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனால் மேடையில் இசை அமைப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை. அதிலும் தவறு நடந்த இடத்தில் நிறுத்தி மீண்டும் அதே இடத்தில் இருந்து வாசிக்க சொல்லும் போது எந்தவித பிசக்கும் இல்லாமல் மிக சரியாக வாசித்தார்கள். புல்லாங்குழல் இசைகலைஞர் அருள்மொழி மிக அற்புதமாக வாசித்தார். (அவரு பேரு மட்டும் தாங்க தெரியும் அதான்)
இவரு தான் அருள்மொழி
நிகழ்ச்சி முடியும் நிலையில் பெரும் பாலான மக்கள் அரங்கத்தில் இருந்தனர். ஜெயராம் ஒன்னு சொன்னாரு நானும் இதே ஷார்ஜா அரங்கத்தில் பல நிகழ்ச்சிகளில் வந்திருக்கேன் 10 மணி மேல அந்த கடைசியில யாரும் இருக்க மாட்டாங்க சார். இப்போ மணி 11 ஆகுது இன்னும் இவ்வளவு பேரு இருக்காங்கன்னா அதுக்கு ஒரே காரணம் நீங்க தான் சார். உண்மையிலும் உண்மை அது இளையராஜா என்ற ஒரு பெயருக்கு உள்ள சக்தியை நிறுப்பித்து கண்பித்தது கூட்டம்.
நிகழ்ச்சியல் இடம் பெற்ற பாடல்கள்
இது சங்கீதா திரு நாளே - பவதாரணி - இதில் பாடல் வரிகள் மாற்றி பாடினார்கள்
இளைய நிலா பொழிகிறதே - பாலு சார்
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சித்ரா
மயில் போல பொண்ணு ஒன்னு - பவதாரணி
காற்றில் எந்தன் கீதம் - ஸ்ரேயா கோஷல் (ஜானகி அம்மா குரலில் கேட்ட பாடல் இந்த அம்மணி எந்த சேதாரமும் இல்லாமல் பாடினார்)
பாட்டு சொல்லி பாட சொல்லி - சாதனாசர்கம்
சென்பகமே சென்பகமே - மனோ
நான் தேடும் செவந்தி பூவிது - ராஜா, மஞ்சரி
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு - பாலு சார் - சித்ரா
மாசி மாசம் ஆளான பொண்ணு - விஜய் ஜேசுதாஸ், மது பாலகிருஷ்ணன், மஞ்சரி
இளங் காத்து வீசுதே - திப்பு, ஸ்ரேயா கோஷ்ல்
நின்னு கோரி வரனும் - சித்ரா
சொர்கமே என்றாலும் - ராஜா, சதனாசர்கம் - இதில் வரிகள் மாற்றி பாடினார்கள் அட்டகாசமாக இருந்துச்சி
அந்தி மழை பொழிகிறது - பாலு சார், சித்ரா
என்ன சொல்லி பாடுவதோ - சதனாசர்கம் - செந்தில் (இசை குழுவில் ஒருவர்)
மதுர மரிக்கொழுந்து வாசம் - மனோ - சித்ரா
மன்றம் வந்த தென்றலுக்கு - பாலு சார் - ஸ்ரேயா கோஷ்ல்
அடி ஆத்தாடி - ராஜா - சித்ரா
சுந்தரி கண்ணால் ஒரு சோதி - பாலு சார், சித்ரா (இசை குழுவினார் அட்டகாசமாக வாசித்த பாடல் இது)
மாங்குயிலே பூங்குயிலே - பாலு சார், சித்ரா
ஆகாய வெண்ணிலாவே - விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி
ஒ பிரியா பிரியா - மனோ, சித்ரா
அடி ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா - பாலு சார்
தென்றல் வந்து தீண்டும் போது - ராஜா, சித்ரா
சங்கீத ஜாதி முல்லை - பாலு சார்
அறியாத வயசு - ராஜா
ஒ இந்த காதல் நெஞ்சசை சுடுக்கிறதே - யுவன்
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா - ராஜா, கார்த்திக், யுவன் - வரிகள் மாற்றி பாடிய பாடல்
தெண்பாண்டி சீமையிலே - ராஜா
எந்து பரஞ்சாலும் நீ எந்தன் - சித்ரா - மலையாளம்
ஒரு சிரிகண்டால் மொழிகண்டால் அது மதி - விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி - மலையாளம்
ராக்கம்மா கையை தட்டு - பாலு சார் - இந்த பாடல் ஏன்தான் மேடையில் பாடினார்களோன்னு இருந்துச்சி ஒரே அருதல் பாலு சார் குரல்
சில பாடல்கள் மறந்து போயிடுச்சிங்க மக்களே
எல்லாம் முடிஞ்சி ஒரு பெரிய நன்றியை சொல்லிட்டு கிளம்பும் போது நேரம் 12.30. நல்ல குளிர், மனசு நிறைஞ்சி இருந்தது, ரொம்ப நாளா வேண்டிக்கிட்டு இருந்த ஒரு வேண்டுதல் நிறைவேறி விட்ட ஒரு திருப்தி.
மேலும் இந்த நிகழ்ச்சியை பற்றிய பதிவுகள்
பினாத்தல்கள் - எப்பவும் நீ ராஜா
குசும்பன் - அமீரகத்தில் இளையராஜா