Monday, April 06, 2009

மழை...


நீண்ட நாட்களுக்கு பிறகு அமீரகத்தில் மழை....ஒரேயடியாக பேய்ந்து தள்ளிவிடுவேன் என்கிறது...ஒரே எரிச்சலும் இம்சையுமாக இருந்தது. நான் வசிக்கும் இடம் அப்படி. தொடர்ந்து 1மணிநேரம் பெய்தால் போதும். மின்சாரம் தானாக போய்விடும். உடனே கம்பெனிக்கு தகவல் அனுப்ப வேண்டும் அவர்கள் வந்து என்ன ஏதுன்னு பார்த்து சரியாக்குறதுக்கள்ள விடிஞ்சிடும். பள்ளிக்காலங்களில் மழை பெய்தால் மனதுக்குள் செம ஜாலியாக இருக்கும். ஆண்டவா மழை நல்லா பெய்யணும். ஸ்கூல் முழுக்க தண்ணி தேங்கி லீவு விடணும். ஆனால் எங்க தெருவுல மட்டும் தண்ணியே தேங்கக்கூடாது என்று எல்லாம் வேண்டியிருக்கிறேன். தெருவில் தண்ணீர் தேங்கிவிட்டால் கிரிக்கெட் ஆட முடியாதுல்ல அப்பவே நான் எம்புட்டு நல்லவன் பார்த்திங்களா! (எப்படி நீ நல்லவன்னு கேட்பவர்காக - பின்ன ஒரு தெருமுழுக்க தண்ணீர் தேங்கக்கூடாதுன்னுல வேண்டியிருக்கேன்)

*****************************

போன மாதம் முழுக்க ஆணிகள் அந்த அளவுக்கு இல்லை. எல்லாம் உலக பொருளாதார வீழ்ச்சி. அந்த வீழ்ச்சி எங்க கம்பெனியையும் கொஞ்சம் பயன்படுத்திக்கிடாங்க. அதனால 12 மணிநேரம் வேலை 8 மணிநேரமாக குறைந்தது. ஒரு பக்கம் என்னாடா ஆப்பு இப்படி வருதேன்னு நினைத்தாலும் இன்னொரு பக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மீதி நேரத்தில் பக்கத்தில் உள்ள warehouseல் கிரிக்கெட் ஆட ஆரம்பிச்சிட்டோம். நீண்ட நாளைக்கு பிறகு விளையாடியாதால் ஒரு ஓவருக்கு 13 பால் போடவேண்டியாதிடுச்சி. கொஞ்சம் ஏறி நின்னு அடிச்சதில் காலில் காயம் வேற. ஆனாலும் விடாப்பிடியாக தினமும் பேட்டை தூக்கிக்கொண்டு 3 மணிநேரம் நன்றாக விளையாடி வந்தோம். வழக்கம் போல இப்போது ஆணிகள் குவியத்தொடங்கிவிட்டது. பழையபடி 12 மணிநேர வேலைன்னு சொல்லிட்டாங்க. பழையபடியே திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பிச்சாச்சு.

***********************************

சென்ஷி, நான் மற்றும் ஆதவன், அய்ஸிடமிருந்து சில பல திரைப்படங்களை தூக்கிட்டு வந்தது மிகவும் நல்லதாக போச்சு.

காஞ்சிபுரம்

அற்புதமான படைப்பு. படத்தை இயக்கிய பிரியதர்ஷனை மனதாரப் பாராட்ட வேண்டும். மிகவும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார். சொல்லவந்ததை எந்த வித தங்குதடையும் இன்றி யதார்த்தம் குறையாமல் சொல்லியிருக்கிறார். அந்த படத்தின் ஒளிப்பதிவை பாராட்டியே ஆக வேண்டும். இயற்கையான வெளிச்சத்தை மிக அழகாக நம் கண்களுக்கு காண்பித்திருக்கிறார்கள். முதலாளி மகளுக்கு பட்டுப்புடவை நெய்வதை பற்றி பிரகாஷ் சொல்லும் காட்சி மிக அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் நடித்தவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை அருமையாக செய்திருக்கிறார்கள்.

நான் கடவுள்

எப்படா வருமுன்னு தவம் கிடந்த படம். கண்டிப்பாக திரையரங்கு சென்று பார்க்க நினைத்த படம். வந்துவிட்டது ஆனால் பல நாடுகளில் வெளியான இந்த படம் இந்த நாட்டுல மட்டும் வெளிவரவில்லை. திரு(பின்ன ஸ்டார் ஆகிட்டாருல்ல). குசும்பன் அண்ணனிடம் கேட்டதற்க்கு வில்லு, படிக்காதவன் போன்ற படங்கள் தான் வரும் இந்த மாதிரி படம் எல்லாம் வராதுன்னு குண்டை போட்டார். சிடியில் பார்க்ககூடாது என்று நினைத்து கொண்டிருந்தேன். நாம நினைத்தது என்னைக்கு நடந்திருக்கு இப்ப மாத்திரம் ஓடுறதுக்குன்னு ஒரு வழியாக பார்த்தாச்சு. படத்தைப்பத்தி எல்லாரும் பல விதமாக சொல்லிட்டாங்க என்னை பொறுத்தவரையில் சூப்பர் படம். பாலா எந்த காரணத்துக்கும் தன்னோட தனித்திறமையை மாற்றிக்கொள்ளாமல் படங்களை தர வேண்டும்.

The Host (நன்றி : சென்ஷி)

கலைக்கு மொழிகள் கிடையாது (ஆமா..புரியுற மொழியில எடுத்தாலும் உனக்கு புரிஞ்சுட போதாக்கும்) அது உண்மைங்க இது ஒரு ஜப்பான் படம்ன்னு தான் நினைச்சி பார்த்தேன். (ஆனா கொரியன் படமாம்) ஆய்வகத்தில் இருந்து வெளியாகற அமிலம் நகரத்தின் முக்கிய நதியில கலக்குறதால (காட்சில்லா -அணு ஆயுத பரிசோதனைய நினைச்சுக்குங்க) ஒரு புது மிருகம் உருவாகுது. அது அங்கே இருக்கும் மனிதர்களை உயிரோட முழுங்கி ஒரு இடத்தில வச்சி ஃபுல் கட்டு கட்டுது. அந்த மிருகத்துக்கிட்ட ஒரு சின்னப்பொண்ணு மாட்டிக்கிறா. அப்படி மாட்டிய பெண்ணை எப்படி அந்த குடும்பத்தினர் யாரோட பெரிய உதவியும் இல்லாமல் கொண்டு வராங்கன்னு தான் படம். பொதுவா இந்த மாதிரி அனிமேசன்ல எப்படி மக்களை காப்பாத்துறாங்கன்னு யோசிக்குற இயக்குனர்கள் மத்தியில இதுலஒரு குடும்பம் எப்படி சிதையுதுன்னு காட்டியிருப்பாங்க. அந்த பெண்ணோட அப்பாவாக வருபவரின் நடிப்பு டாப்புங்க. அவரோட மகள் இறந்துட்டாள்னு எல்லாரும் சொல்லும்போது, அப்பா இல்ல என்னோட பொண்ணு இறக்கல அவனை அந்த மிருகம் இப்படி வாய் வழியாக வெளியில துப்பியிருக்குமுன்னு செல்போனை வச்சி காட்சிப்படுத்துவாரு பாருங்கள் அட்டகாசம்ய்யா...தன் பொண்ணு தன் பக்கத்தில் இருக்கும் போது அந்த அப்பாவும் குழந்தையாகிடுவான் அவளுக்கு. அன்பை புரிய மொழியே தேவையில்ல அருமையான படம்.

Final Destination 1 2 3

யப்பா சாமிகளா மரணமுன்னு வார்த்தை சொல்றதுக்கே, கேட்குறதுக்கே எம்மாம் பயம் வருது. உனக்கு நேரம் நெருங்கிடுச்சி. மகனே அடுத்து நீ தான் போக போறன்னு தகவல் தெரிஞ்சிட்டா எப்படி இருக்கும். யப்பா படம் முழுக்க மரணம்தான். படம் பார்க்கும்போது எங்க ரூம் நண்பர்களுக்குள்ள எப்படிடா சாவான் இவன் இப்படியா இல்ல அப்படியானு ஒரு பட்டிமன்றமே நடந்துடுச்சி. ஆனா அவன் நாம சொன்னது மாதிரி இல்லாமல் வேற மாதிரி சாவான். அதான் படத்தோட வெற்றி. என்னைக்கேட்டா முதல்பாகம் மூன்றாம் பாகத்தை விட இரண்டாம் பாகம் தான் சூப்பரு. ஏன்னா படம் பார்க்கிறவன் கூட ஏய் அங்க போகாதே நீ செத்துடுவடான்னு யூகிக்க வச்சி கடைசியில ஒரு டூவிஸ்டு (டுவிஸ்டு இல்ல டூவிஸ்டுதான் ஒவ்வொருத்தவனுக்கும் ரெண்டு சான்ஸ் தர்றாங்க. சாவறதுக்கு) வச்சி கலக்கியிருப்பாங்க. இந்த படத்தை பார்த்ததில் இருந்து ஆபிசுல நடக்கவே பயமாக இருக்குது. செமம படம் பாஸ்.

Bangkok Dangerous

Samuel L. Jackson நடித்த Lakeview Terrace படத்தை பார்க்க ஒரு சிடியை வாங்கினேன். கடைசியில தாவு தீர்ந்துடுச்சி அதே சிடியில் நிக்கோலஸ் கேஜ் நடித்த இந்த படமும் இருந்தது. Bankok Dangerus படத்தின் பெயரை பார்த்ததும் ஒரே அடிதடியாக இருக்கும் போல சரின்னு போட்டு பார்த்தேன். அட்டகாசமாக ஆக்க்ஷன் படம் தான் ஆனால் அதை சொன்ன விதம் இன்னும் அட்டகாசம். நாலு பேரை போட்டு தள்ளுவதற்காக ஹாங்காங் வருகிறார் நிகல். அவர் போட வேண்டிய ஆட்களை பற்றி தகவல்கள் வேற ஒரு இடத்தில் இருந்து வரும். அதை கொண்டு வர ஒருவனை வேலைக்கு வைப்பார். அவனே நிக்கோஸ்க்கு சிஷ்யனாக மாறிடுவான். வசனங்கள் நெத்தி பொட்டில் சுட்டது போல சும்மா நச்சுன்னு இருந்தது. படத்தின் துவக்கத்தில் நிகல் சொல்லும் நாலு கொள்கைள் கலக்கல். ஒவ்வொரு காட்சியும் நன்றாக படைத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் யானை தும்பிக்கை கீழாக பார்த்தபடி இருக்கும். அதை பார்த்து அவனிடம் வேலை செய்பவன்(பின்பு சிஷ்யன்) இது சரியான சிம்பள் இல்லை. இது தப்பு. இப்படி வீட்டில் இருந்தால் உங்களுக்கு ஏதோ ஆபத்து வரும் என்று சொல்ல, போடா வெண்ண அதெல்லாம் ஒன்னும் வராதுன்னு என்று கதவை அடைத்துவிடுவான் நிகல். அதே யானை படத்தை ஒருநாள் இரவில் தலைகீழாக மாற்றிவைப்பான் அப்போது அவனுக்குள் ஒரு பெண் வந்திருப்பாள்.அதே பெண் விலகியவுடன் அந்த படத்தை தீயிட்டு எரித்துவிடுவான். அவளிடம் இருந்து விடை பெறும் போதும் எந்த வசனங்களும் இல்லாமல் போயிட்டு வரேன் தாயீன்னு ஒரே ஒரு பெரிய கும்பிடு அம்புட்டுத்தான் போய்க்கிட்டே இருப்பாரு ஹீரோ. அவர்கள் இருவரும் சந்திக்கும் முதல் காட்சியில் இருந்து அவளிடம் இருந்து விடை பெறும் வரை அவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அனைத்தும் அற்புதமான கவிதை.

***********************************

எஸ். ராமகிருஷ்ணனின் எழுதிய "தேசாந்திரி" தொகுப்பை மீண்டும் புரட்டும் போது புன்னகை புரியவைத்த கவிதை இது

சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சிதானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே.
-----------------------------------நா.விச்வநாதன்

ஒருநாள் திடிரென்னு அக்காவிடம் இருந்து அழைப்பு எடுத்து "ஹலோ" என்றேன் மறுமுனையில் "கோபிஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ"ன்னு ஒரு மழலையின் குரல் ஆடிப்போயிட்டேன். "ஏய்"ன்னு என்னோட பதில் அங்க போறதுக்குல்ல மீண்டும் "கோபிஇஇஇஇஇஇஇஇ தப்பிட்டியா", "நல்லாயிருத்தியா" என்று அக்காவின் 3வயது மகள் கேட்டு கொண்டே இருக்கிறாள். அந்த குரலை கேட்கத்தானே தோன்றுகிறதே தவிர பதில் வரவில்லை. என்னிடம். அக்கா பின்னால் இருந்து "சாப்பிட்டிங்களா மாமான்னு கேளு" என்று சொல்கிறாள். இவள் பதிலுக்கு ம்ன்னு சொல்லிவிட்டு "தாப்பிட்டிங்களா மாமான்னு" கேட்கிறாள். கைபேசி கைமாறியவுடன் "ஹலோ இருக்கியாடா" என்று அக்காவின் குரல் என்னை மீண்டும் இந்த உலகத்துக்கு வரவழைத்தது. "ம் இருக்கேன் என்ன திடீர்ன்னு போன்" என்றேன் என் பெண்ணு தான் உன் போட்டாவை பார்த்து கோபி கோபின்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சி. அதான் பேசுறியான்னு கேட்டேன், பேசுறேன்னு சொன்னா... அதான் போன் செஞ்சேன்" என்றாள்.

"ம்" என்றேன்.

"எப்படிடா என் பெண்ணு நல்லா பேசுறாளா!?"

"யம்மா தாயே வாய மூடுன்னு சொல்றவரைக்கும் பேசுறவ நீ, உன் பொண்ணு பத்தி சொல்லவா வேணும்.....கலக்குறா" என்று கிண்டலை அவளிடம் கொடுத்துவிட்டு அந்த பொழுதின் சந்தோஷத்தை என்னிடம் வைத்துக்கொண்டேன் சுயநலத்துடன் ;)

மழை தொடரும்.......