Monday, April 28, 2008

பெளர்ணமி நினைவுகள்...




எப்பவும்போல வழக்கமான இடத்தில உட்காந்தே யோசிச்சேனுங்க. அப்படி இருந்தும் வழக்கமாக வர்ற ஐடியா கூட இந்த முறை வரமாட்டேங்குது. இது என்னடா இப்படி ஆகிப்போச்சேன்னு ஒரே யோசனையில இருக்கும்போதுதான் நம்ம மாப்பி "சென்ஷி" ஞாபகம் வந்துச்சு. சரி..அவனுக்கு ஒரு போனை போட்டு ஐடியா கேட்போம். அவன் இப்ப எல்லாம் நிறைய பதிவுகளில் விவாதம் பண்றான். தமிழ்மணத்தில் அரசியல் எல்லாம் அத்துபடியாச்சேன்னு நினைச்சி அவனுக்கு ஒரு போனை போட்டேன். (மக்களே இப்ப வழக்கமான சென்ஷியே இல்ல அவன்....ம்ம்ம் நம்புங்க)

நானும் போனை போட்டு வழக்கமாக கேட்குறமாதிரியே ஆரம்பிச்சேன்,
"என்ன மாப்பி எப்படி இருக்கே"

அவனும் வழக்கமாக கொடுக்குற அல்வாவையே கொடுத்தான்,"ஹாய்டா செல்லம் நீ எப்படி இருக்கே"

நான்: ம்ம்ம்....ஏதோ போகுதுப்பா.....

சென்ஷி; ஆமா ஏன்டா ரெண்டு நாளா போனே போடுல

நான்: ஆணி அதிகம் மச்சி அதான்.. சரி நான்தான் போடல நீயாவது மிஸ்டு கால் கொடுத்திருக்கலாமுல்ல

சென்ஷி: ம்...உன் ஆபிசுக்கு போனை போட்டு உனக்கு கனெக்ட் பண்ணுறதுக்குள்ள தாவு தீர்ந்து etisalat பில்லு கிழியுது.

நான்: சரி ஆபிசுக்குதான் வேண்டாம். என்னோட செல்லுக்காச்சும் ஒரு மிஸ்டு கால் கொடுத்திருக்கலாமுல்ல

சென்ஷி: மிஸ்டுகால் எதுக்குடா

நான்: ம்ம்ம்...நீ உயிரோடதான் இருக்கேன்னு தெரிஞ்சிக்க..

சென்ஷி: அடப்பாவி இதுல இப்படி எல்லாம் வேற இருக்கா!!

நான்: பதிவு போட ஏதாவது ஐடியா கொடேன். உனக்கு இந்த பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம், விவாதம், அரசியல் இதெல்லம் அத்துப்படியாச்சே....இப்போ தமிழ்மணத்துல எந்த பதிவுல மவுசு அதிகம் க்ளிக் ஆகுதுன்னு கொஞ்சம் சொல்லேன்.

சென்ஷி: மச்சி இதுக்கு எல்லாம் செலவு கொஞ்சம் அதிகம் ஆகும்.. பரவாயில்லையா!

நான்: செலவுதானே! அதுபாட்டுக்கு எவ்வளவு ஆனா என்ன?! நீ சொல்லு மச்சி.. உனக்கு நான் தனியா ஸ்பெசலா கவனிக்கிறேன்.

சென்ஷி: நீ வழக்கமா உள்குத்துவச்சி பேசற மாதிரியே பேசுற....சரி போன வருஷம் ஒரு பதிவுல எந்த பதிவுன்னு சரியாக ஞாபகம் இல்ல, ஆனா சூப்பர் பதிவு. அதுல வழக்கம்போல செந்தழல் ரவி தான் முதல் பின்னூட்டம். அடுத்த பின்னூட்டம் லக்கின்னு நினைக்கிறேன். நான் தான் மூணாவது பின்னூட்டம். இதுல மேட்டர் என்னன்னா.. செந்தழல் ரவிக்கு போட்ட பின்னூட்டத்துக்கு லக்கி ரீப்பிட்டே போட, நான் டக்குன்னு லக்கி போட்ட ரீப்பிட்டே பின்னூட்டத்துக்கு ரீப்பிட்டே இப்படிக்கு டில்லியில் இருந்து சென்ஷின்னு போட்டேன்....எப்படி மச்சி சூப்பர் இல்ல

நான்: டேய்....டேய்...ஆரம்பிச்சிட்டியா. நான் உன்னை என்ன கேட்டேன் நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கே.....நானே ஒரு ஐடியாவும் கிடைக்க மாட்டேங்குதேன்னு உன்கிட்ட கேட்டா நீ என்னடான்னா உன் பின்னூட்ட சரித்திரத்தை சொல்லிக்கிட்டு இருக்கே...அதுவும் ரீப்பிட்டு. உன் கூட சேர்ந்ததுக்கு தமிழ்மணத்துல ரீப்பிட்டே கோபின்னு பேரு வாங்குனதுதான் மிச்சம்.... ஐடியா கொடுடான்னா....

சென்ஷி: சரி சரி கூல் மச்சி....இன்னிக்கு நேத்தா நாம இப்படி எல்லாம் ரீப்பிட்டே போடுறோம்.

"வெளங்கிடுவோம்டா"ன்னு சொல்லிட்டு போனை வச்சிட்டு நண்பன் ஒருவன் எடுத்திருந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டுயிருந்தேன். ஒவ்வொரு புகைப்படங்களிலும் ஒவ்வொரு அழகு ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பழைவு நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொண்டுயிருந்தது. நினைவுகள் இல்லைன்னா தனிமை ரொம்ப கொடுமையாகிடும் போல. அதே நினைவுகள் அதிகமானாலும் தனிமை கொடுமையாகிடும்.

அவன் அனுப்பியிருந்த புகைப்படங்களில் முழுநிலா கொண்ட புகைப்படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மின்சாரம் இல்லாத இரவுகளில் நிலாவின் ஒளி எங்கள் வாசல் முழுவதும் பரவியிருக்கும். வாசலில் விழும் ஒலியில் கைகளை எல்லாம் அகட்டி திரட்டி விதவிதமாக உருவங்கள் வரவழைத்து நிழலில் விளையாடிக் கொண்யிருப்போம். மிகப்பெரிய வாசல் கொண்ட அந்த வீட்டில் மொத்தம் ஆறு குடித்தனங்கள். எல்லோரும் அந்த வாசலில்தான் துணி துவைப்பது, மிளகாய் எல்லாம் காயவைப்பது... எங்களுக்கு நெட்டி ஆடுவது போன்றவை எல்லாம். என் சித்தப்பா எனக்கு ஏபிசிடி சொல்லி கொடுத்ததும் அந்த வாசலில் வைத்துத்தான்.. சும்மா இல்லைங்க... முட்டிப்போட்டு கண்களில் சுக்கு இழைத்துப்போட்டு சொல்லிக் கொடுத்தார். கடைசி வரை சுக்கு கரைந்தது தான் மிச்சம். எனக்கு தெரிஞ்சது எல்லாம்...

"ஏபிசிடி
உங்கப்பன் தாடி
வந்தா வாடி
வராட்டி போடி" தான். (முத்துக்கா வீட்டு பாடம் செய்துட்டேன்)

பல சுபகாரியங்களை பார்த்திருக்கிறது அந்த வாசல். சில இறுதி பயங்களும் அந்த வாசலில் வைத்து தான் தொடங்கியிருக்கிறது. அம்மாவுக்கு உதவி செய்கிறேன்னு என்று அம்மாவுக்கு இம்சை கொடுத்து ஓட ஓட அடிவாங்கியதும் அந்த வாசலில் வைத்து தான். ரத்த சொந்தங்களாக இல்லாமல் பழகியபழக்கத்தில் வந்த சொந்தங்களும் கிடைத்ததும் அந்த வாசலில்தான். வெறும் பக்கத்து வீட்டு ஆளுங்க தானே என்று இல்லாமல் அவங்க வீட்டில் ஒருவன்போல என்னையும் அன்பாக பார்த்த சொந்தங்கள். நான் பள்ளி முடிந்து வீடு வரும் எனக்கு வீட்டில் அம்மா இல்லை என்றால் எப்படியும் இவர்களின் ஒருவர் வீட்டில் இருந்தாவது எனக்கு தேவையான சிற்றுண்டிகள் வந்துவிடும்.

எனக்கும் சாப்பாட்டுக்கும் ரொம்ப தூரம் (எவ்வளவு கிலோமீட்டர்ன்னு எல்லாம் கேட்ககூடாது.. உத்தேசமா கையிலேந்து வாய் வரைக்கும்ன்னு வச்சுக்குங்க). ஆனா இந்த சிற்றுண்டிகள் எல்லாம் தின்னுக்கிட்டே இருப்பேன். சரியாக சாப்பிடாமல் அடம்பிடிக்கும் நேரத்தில் அம்மாவின் கடைசி ஆயுதமாக அம்மாவின் கையால் பால் சோறு கிடைக்கும். நன்றாக காய்ச்சிய பாலை அம்மா மெதுவாக ஊதி ஊதி அந்த ஏடுகளை எல்லாம் தள்ளித்தெளிந்த பாலை ஊற்றி தேவையான அளவுக்கு உப்பு போட்டு நன்றாக பிசைந்து எலுமிச்சை ஊறுகாய் தொட்டு ஊட்டுவாங்க. அந்த வாசல் முழுக்க ஓடி ஓடி ஒவ்வொரு வாயாக வாங்கி வழிச்சி தின்பேன். நிலாவுடன் சேர்த்து பால்சோறு கிடைக்கும் தருணங்கள் இனி எப்போது!?.



சில வருடங்களுக்கு முன்னால் பெளர்ணமிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றதுண்டு. இரவுகளில் பயணம் செய்வது எனக்கு பிடித்தமான ஒன்று. யாருக்குத்தான் பிடிக்காது!அந்த இருள் கலந்த அமைதியை ரசிப்பதில் யாருக்கு வெறுப்பு வந்துவிடும். அந்த இரவின் அமைதியிடம் முழுமனதையும் பறிகொடுத்து ஆழ்ந்து அந்த அமைதியை ரசிப்பது மனதுக்கு நிறைவாக இருக்கும். கிரிவலம் செல்லும் போதும் இரவு பயணங்கள் தான். அதுவும் அந்த இரவுகளில் மலையை சுற்றி நண்பர்களுடன் நடைப்பயணம் செய்வது ஒரு சுற்றுலா போல இருக்கும். வெளியில் இருந்து கொண்டே அண்ணாமலையாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தோம். சிறுவர்கள், பெரியவர்கள், பக்திமான்கள் என்று மக்கள் கூட்டம். உணர்ந்து பலபேர்.. உணராமல் விளையாட்டுக்கு சிலபேர் என்று அவரவர் கையில் ஆயிரம் ஆயிரம் சுமைகளுடன் அந்த அண்ணாமலையாரிடம் இறக்கி வைக்க நேரம் பார்த்து நடையில் வேகத்தை கூட்டியும் குறைத்தும் கொண்டு நடந்துக் கொண்டுயிருப்பார்கள்.

அண்ணாமலையாரை சுற்றி இருக்கும் மற்ற லிங்கங்களை பார்க்கும்போது மனதில் ஒரு சோகம் வந்து அமர்ந்துக்கொள்ளும். யாரும் சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டது போல களையிழந்து இருக்கும். சிவன் கோவில்கள் எல்லாம் இப்படி கலை இல்லாமல் வர்ணங்கள் இல்லாமல் ஒருவித பாழடைந்தது போல இருக்கிறது என்று தோன்றும். பயணம் தொடங்கும்போது பழைய நினைவுகளுடன் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கிண்டல் செய்துக்கொண்டே வருவோம். சிறிது நேரம் கடந்தவுடன் அந்த பேச்சு அப்படியே எதிர்காலத்தில் எப்படி எல்லாம் வர வேண்டும். யார் யார் எல்லாம் எந்த நிலையில் இருப்போம் என்று கற்பனைகளுடன் பேசி கொள்வோம். கடைசியில் "அடப்போடா! அடுத்த நிமிஷம் என்ன நடக்க போகுதோ.. இதுல அடுத்த வருஷத்துக்கு போயிட்ட...எதுவாக இருந்தாலும் அனுபவிக்கலாம் மச்சி" என்று எதிர்கால பேச்சுக்கு விடை கொடுத்துவிட்டு எந்தவித பேச்சும் இல்லாமல் கடைசிப்பயணம் செல்லும். கடைசி தூரப்பயணத்தில் எங்களை அறியாமல் இடைவெளி வந்துவிடும். அது பேச்சின் கலைப்பா அல்லது ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் தேவைப்படும் தனிமையா.. அறியாமலே இடைவெளியுடன் பயணம் தொடரும். ஒரு குழந்தைப்போல தனக்குள்ளேதான் கண்ணுக்கு மட்டும் தெரியும் அந்த கற்பனை பிம்பத்துடன் விளையாடுவது போல எங்களுக்குள் இருக்கும் எங்களை சிதைக்காத கற்பனையுடன் மனதுக்குள் பேசிக் கொண்டே கடந்து போகும் கடைதூரம். இதனால் ஒவ்வொருவரும் மனதால் ஒன்றாக சேர்வதற்க்கு சில நிமிடங்கள் பிடிக்கும்.

இங்கே வந்தப்பின்னும் பல பெளர்ணமிகள் பார்த்திருக்கிறேன். கூட்டுக்குள் அடைப்பட்ட ஒரு கிளியை போல, வேலியாக பின்னப்பட்ட இரும்பு கம்பிகளுக்கு உள்ளிருந்து. பள்ளிக்கு செல்ல பயப்பட்ட வயதில் அம்மாவின் விரல்பிடித்து செல்வேன். பள்ளியின் வாசலில் எங்கள் இருவரின் விரல்களும் பிரிவை உணர்ந்ததும் அழுகையை முட்டிக் கொண்டு வரும். ஏனோ தெரியவில்லை இப்போது அந்த ஞாபகங்கள் வருகிறது.